சனி, 1 ஜூலை, 2006

உலகைச் சீரமைத்தல் - குட்டிக்கதை



செய்தித்தாளை அப்பா படிக்க முயன்றுகொண்டிருந்தார், ஆனால் அவருடைய மகன் அவரைத் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டிருந்தான். இறுதியில், அவர் பொறுமையிழந்து, ஒரு உலக வரைபடம் உள்ள செய்தித்தாளின் ஒரு பக்கத்தைக் கிழித்து, அதனைப் பல துண்டுகளாக்கித் தனது மகனிடம் கொடுத்தார்.

''சரி, இப்போது உருப்படியான ஒரு வேலையைச் செய். நான் உன்னிடம் உலக வரைபடம் ஒன்றைக் கொடுத்துள்ளேன், உன்னால் அதனை மிகச்சரியாக ஒன்றுசேர்க்க முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன்.''

அவர் படிப்பதை மீண்டும் தொடர்ந்தார், அந்த வேலையானது அந்தக் குழந்தையை அந்நாள் முழுக்க ஆக்கிரமித்துக் கொள்ளும் என்று நினைத்துக்கொண்டார்.  ஆனால், ஒரு கால் மணி நேரம் கழித்து, அந்தப் பையன் அந்த வரைபடத்துடன் வந்து நின்றான்.

திகைத்துப் போன தந்தை கேட்டார், ''உன்னுடைய அம்மா உனக்கு புவியியல் எல்லாம் கற்றுக்கொடுத்துட்டாங்களா?''

''எனக்கு அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது,'' என்றான் அந்தப் பையன். ''ஆனால் அந்தப் பக்கத்தின் பின்புறம் மனிதர்களின் படம் ஒன்று இருந்தது, அதனால் அந்த மனிதர்களை ஒன்றுசேர்க்கப் போய், இந்த உலகத்தையும் மீண்டும் ஒன்றுசேர்த்து விட்டேன்.''

-Paulo Coelho

கருத்துகள் இல்லை: